அண்ணாகண்ணன் கவிதைகள்: நடை

Wednesday, August 10, 2005

நடை

(வெண்பாவில் கதை சொல்லும் முயற்சி, இது. எதுகை, மோனையை மட்டும் விலக்கிவிட்டு, அடிப்படை இலக்கணமான வெண்டளை பிறழாமல் இதை ஆக்கியுள்ளேன். பெரும்பாலும் வகையுளிக்கு உட்படுத்தாமல் முழுச் சொற்களாக விட்டுள்ளேன். தளை பார்க்க விரும்புவோர், பிரித்துக்கொள்ளுங்கள்.)

ஒருமழைநாள்; எங்கும் உறைஇருள்; அந்தத்
தெருவில் இருள்தடவிக் கொண்டே - நடந்தேன்.
எனக்குத் தெரியாது எதிரே ஒருத்தி
எனைப்போல் வருகிறாள் என்று.

என்கை அவள்முகத்தில்; என்மார்பிலோ அவள்கை.
மின்னியது மின்னல் அந்நேரம்பார்த்து! - பெண்அழகாய்த்
தான்இருந்தாள். 'மன்னிக்க வேண்டும்' எனும்போதும்
சொன்னோம்: 'அடச்சே இருட்டு'.

மேலும் இரண்டடி வைத்திருப்பேன். 'ஆ'என்றோர்
கூச்சல். இருளால் தடுக்க - முடியாத
சத்தம் வழிகாட்ட, கைகளால் கண்டேன்.
அவள்சேற்றில் வீழ்ந்திருந் தாள்.

'வழுக்கி விழுந்துவிட்டேன். மண்ணாயிடுச்சு உடம்பு'
என்றாள். 'மழையிலே நில்லுங்க - போயிடும்'
என்றேன். 'அதில்லை. மண்ணு உள்ளேபோய்க் குத்துது.
உடனே கழுவணும்'என் றாள்.

மீண்டும் உதித்தது மின்னல். தெரிந்தது
கையடி நீர்க்குழாய் ஒன்று. - அவள்கழுவ
நான்அடித்தேன். 'கொஞ்சம் திரும்பி அடியுங்கள்.
ஆடை களையணும்'என் றாள்.

எப்படிப் பார்ப்பேன் இருட்டில்? என்றாலும்
திரும்பினேன். அவள்குளித்தே விட்டாள். - குறும்பாக
ஓர்தவளை பாய்ந்தது அவள்மேலே. வீலென்று
கத்தி அணைத்தாள் எனை.

தவளைக்கு நன்றி! இருள்மழை மின்னல்
அனைத்துக்கும் நன்றிசொல்லும் வேளை - அவள்சொன்னாள்
'ரொம்ப பயமா இருக்கு. என்னை என்வீட்டில்
கொண்டு விடமுடியு மா?'

அவள்கூந்தலில் இருந்து நீர்த்துளிகள் என்முதுகில்
சொட்டின. இன்னும் மழைவிட - வில்லை.
உடைஉடலோடு ஒட்ட, கால்கள் பின்ன, இடையுரச,
கைகோத்த வாறுஎம் நடை.

தெருக்களைத் தின்றன எம்கால்கள். 'அய்யோஎன்
கால்வலிக்குதே' என்று அமர்ந்தாள். - அவளை
இருகையால் தூக்கிஎன் மார்போடு அணைத்து
நடந்தேன் வெகுநேர மாய்.

வீடுவந்து விட்டதென்றாள். பார்த்தால் அ·துஎன்வீடு.
கையில் இருந்தவளும் இல்லை. - கதவருகே
நின்றென்னை வித்யாசமாய்ப் பார்த்தாள் அம்மா.
தலைதுவட்டிக் கொண்டிருந்தேன் நான்.

(சுந்தர சுகன் / ஜூன் 2001 / இதழ் எண்: 169)

1 comment:

சிவகுமாரன் said...

நன்றாய் இருக்கிறது, ஆனால் வெண்பா படித்த உணர்வு எழவில்லை.