அண்ணாகண்ணன் கவிதைகள்: மூன்று கவிதைகள்

Sunday, August 07, 2005

மூன்று கவிதைகள்

மரண ஊர்வலத்தின் முன்

மரண ஊர்வலத்தின் முன்
நான் நடனம் ஆடுகிறேன்.
சீழ்க்கை ஒலிக்கும்
வெடிச் சத்தத்திற்கும் நடுவில்
நான் அபிநயிக்கிறேன்.
அழுகையும் மெளனமும்
அடர்ந்த கூட்டத்தின் முனைநான்
மயானத்தை நோக்கிய பாதையில்
வாழ்வின் தத்துவங்களை விளக்கியபடி
சுழன்றுச் சுழன்று
துள்ளித் துள்ளி
நகர்ந்தபடியே போகிறது என்
நாட்டியம்.
என் ஆடைக்கு வரையறை இல்லை.
என் அசைவுக்கு இலக்கணம் இல்லை
என் மேடைக்கு எல்லைகள் இல்லை
நவரசங்களின் கலவையாக
அறுசுவைகளின் சேர்க்கையாக
நிற்காத காற்றாக
நான் ஆடுகிறேன்.
உயிரற்றவற்றை ஏந்தும் மனிதரைப் பரிகசித்தபடி
லட்சியங்களின் வீழ்ச்சிக்கு வருந்தியபடி
கொடுமையின் தோல்விக்கு மகிழ்ந்தபடி
எண்ணற்ற உணர்வுகளோடு
நான் ஆடுகிறேன்.
வேகமாக வெகு வேகமாக
நகர்கிறது என் உடல்.
அகராதியில் இல்லாத சொற்களோடு
என் மொழி.
சமுதாயத்தைப் பிரதிபலிக்கிற
ஒரு கண்ணாடியாக என் முகம்.
கனவுகளோடு உரையாடும்
எனது மனம்.
எந்த நேரத்திலும்
எந்த நிலத்திலும் பதியலாம்
எனது கால்.

-------------------------------
கர்மயோகம்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்
க்ரார்ர்ர்ர்ர்ர்ர்
ருர்ர்ர்ர்ர்ர்
க்ளிங் க்ளிங் க்ளிங்
கீய்ங் கீய்ங் கீய்ங்
க்ஈஈஈஈஈஈங்
பட் பட் பட் பட்
க்ர்ர் க்ர்ர் க்ர்ர்
டமடம டமடம
ப்பாம் ப்பாம் ப்பாம்
இத்தனைக்கும் அசையாமல்
அந்த நாற்சந்தித் திட்டின்மேல்
அமர்ந்து
ஓர் எலியைக்
கிழித்துக்கொண்டிருக்கிறது
காகம்.

-------------------------------

சுடர்

வயிற்றிலொரு கடிகாரம் மணிய டிக்க,
வாய்க்குளத்தில் நீரற்று நாமீன் துள்ள,
துயிலுடுக்க விழியிரண்டும் துடிக்க, காரத்
துயருடுத்தி இமையிரண்டும் தடிக்க, கொண்ட
இயல்பனைத்தும் தலைகீழாய் எகிற, மொத்த
இயக்கமொரு சுழலுக்குள் அமிழ, ஆஹா
உயிர்வெளிச்சம் மின்மினிபோல் மின்ன, என்முன்
உருப்பெருக்கும் பசிச்சுடர்மம் விண்ணிடிக்கும்.


( அமுதசுரபி - அக்டோபர் 2004)

No comments: