அண்ணாகண்ணன் கவிதைகள்: 2006

Thursday, November 23, 2006

அந்தி மழை - கவிதைத் திருவிழாவில் நான்

அந்தி மழை இணைய தளத்தின் கவிதைத் திருவிழா பகுதியில் இந்த வாரம் என் இசைப் பாடல்கள் சில வெளியாகியுள்ளன.

சுட்டி இங்கே >>>

Saturday, November 11, 2006

பொய்க்காரி



சிறுகுழந்தை போலென்னை அடிப்பாள்; சற்றே
சிடுசிடுத்தால் கண்ணீரில் குளிப்பாள்; வாழ்வில்
விறுவிறுப்பைக் கூட்டுகிற விதமாய் என்னை
விரட்டுகிறாள் தொலைபேசி ஊடே. சற்றும்
பொறுமையில்லை; வசையுண்டு; முரடு! இந்தப்
பூவையிடம் குறைகள்உள; ஆனால் அன்புச்
சிறையினிலே எனைவைத்து விட்டாள்! அஃதை
உடைத்தாலோ உடைந்திடுவாள்! என்ன செய்ய?

அடிக்கடிஏன் அழுகின்றாய் என்றால், நீதான்
அழவைத்தாய் என்கின்றாள்! அழகுப் பெண்ணே
அடிக்கடிஏன் துயில்கின்றாய் என்றால், நீதான்
அசந்தென்னைத் துயிலவைத்தாய் என்றாள்! ஆஹா
பொடிப்பொடியாய்ப் பொய்யுரைப்ப தேனோ என்றால்
பொய்க்காரி நானில்லை நீதான் என்றாள்!
நடிப்பதில்லை என்தோழி. நடந்தவைக்கு
நானேதான் காரணமோ? இருக்கக் கூடும்.

சட்டென்று சினம்கொள்ளும் பாப்பா! காட்டுச்
சருகுகளை மிதிப்பதுபோல் பார்ப்பாள்! நட்பை
வெட்டிவிட்டால் தொல்லையில்லை என்றால், சீறி
வெறிகொண்டு பாய்ந்தொருகை பார்ப்பாள்! ஓஹோ
வெட்டவேண்டாம் ஒட்டிக்கொள் வாடி என்றால்
வேளைவரும் காத்திருடா என்பாள்! பூவாய்
நட்டநடுவில் நிற்கும் பாவை! என்றன்
நடைவழிக்கு அவளென்றும் தேவை தேவை!!

மடிவேண்டும் தோள்வேண்டும் என்றே என்றன்
மனத்திற்குள் கூடாரம் போட்டாள்! என்னுள்
வடிவெடுக்கும் கனவுகளைக் கேட்டுத் தன்னின்
வலதுகரம் சேர்க்கின்றாள்! ஐயம் போக்கிப்
படிப்படியாய்ச் செதுக்குகிறாள்! ஒற்றை ஆளே
படையாகத் தெரிகின்றாள்! உழைக்கச் சோராள்!
அடிப்படையில் நல்லவளே! உண்மை என்றே
அடுத்துவரும் பத்தியினை நம்பிடாதே!

பறக்காத பறவைநீ! பார்க்கும் என்னைப்
பறக்கவைக்கும் பறவைநீ! பச்சை ராணி!
பிறக்காத பாடல்கள் எனக்குச் சொந்தம்
பிறக்கின்ற பாடல்கள் உனக்குச் சொந்தம்
உறங்காத நேரத்தை உனக்களிப்பேன்
உறங்குகிற நேரத்தை எனக்களிப்பாய்!
திறக்காத திரவியம்நீ! ஆனால் என்னைத்
திறக்கின்ற யாழினிநீ! வாழ்க வாணி!

நன்றி: கல்கி தீபாவளி மலர் 2006

Saturday, October 21, 2006

தொடர்வண்டியின் கைப்பிடிகள்

Photobucket - Video and Image Hosting

அவை தலையசைக்கின்றன
ஆரோ சொல்வதை ஆமோதிப்பதைப் போல்.
இடையிடையே மெளனிக்கின்றன
ஞானியைப் போல்.

அவை நடனம் ஆடுகின்றன
திரைப்படங்களில்
வரிசையாக நின்றாடும் துணை நடிகைகளைப் போல்.

அவை விழிக்கின்றன
பரணில் ஏறிவிட்டு இறங்கத் தெரியாத குழந்தையைப் போல்.

அவை ஊஞ்சல் ஆடுகின்றன
கட்டப்பட்ட மாட்டினைப் போல் கட்டுப்பாட்டுடன்.

எந்தக் குற்றமும் செய்யவில்லை
ஆயினும் அவற்றைத் தூக்கில் தொங்கவிட்டுவிட்டார்கள்.

ஆளற்ற தனிமையைவிட
நெரிசலையே அவை விரும்புகின்றன.
அப்போதுதான் அவற்றைக் கைப்பிடிக்கப் பலர் முன்வருவர்.

கைப்பிடியைப் பற்றி நிற்கிறாள் காதலி.
காதலனும் அதே கைப்பிடியைப் பற்றுகிறான்.
அங்கே விரல்கள் உரசும் சரசம்.
மெல்ல இரு கைகளும் இணைகின்றன.

இதை யாரும் பார்க்கவில்லை என்பது அவர்களின் எண்ணம்.
எனக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நடவாதென
ஆடிக்கொண்டே ஆட்டுவிக்கிறது
அந்தர சுந்தரம்.


நன்றி: தமிழ் சிஃபி தீபாவளி மலர்

Sunday, September 10, 2006

செல்லக் கிளியே 'செல்'லை எடு



தரையினில் கால் படாமலே நடக்கிறாய் - வளர்
கனவினில் பல காதங்கள் கடக்கிறாய்.

ஒளிகிற உணர்வைக் கண்டு பிடிக்கிறாய் - விழி
ஒளிதரும் மதுவை மொண்டு குடிக்கிறாய்.

நினைக்கையில் நீயும் அதையே நினைக்கிறாய் - என்
நினைவினை நாலெட்டாக மடிக்கிறாய்.

எனக்கொரு துன்பம் என்றால் துடிக்கிறாய் - உன்
இமைகளும் அறியாது கண்ணீர் வடிக்கிறாய்.

மனத்தினுள் என்னைப் படம் பிடிக்கிறாய் - என்
மவுனத்தை அணுஅணுவாகப் படிக்கிறாய்.

தாமதம் ஆனால் வார்த்தை தடிக்கிறாய் - பெரும்
சண்டமாருதத்தைப் போலே இடிக்கிறாய்.

தொடுகிற தொலைவில்தான் நீ இருக்கிறாய் - செல்லில்
தொடர்புகொள் நிலையில் இல்லை என விடுக்கிறாய்.

அழைக்கிற செல்லைக் கொஞ்சம் எடுக்கிறாயா? - இல்லை
அழையாத தொலைவுக்கு என்னைக் கொடுக்கிறாயா?

Sunday, August 27, 2006

பாரம்



உன்னிடம் பேசினேன்
பாரம் இறங்கியது.

நீ பேசினாய்
பாரம் கூடியது.

இடையில் பேசாதிருந்தோம்.
பாரம், அபாரமாகிவிட்டது.

Sunday, August 06, 2006

சக்கைப் போடு

கட்டம் போட்ட சட்டை போட்ட குட்டிப் பையனே
சட்டம் போட்டும் மட்டம் போடும் சுட்டிப் பையனே
இட்டம் போலக் கொட்டம் போட நட்டம் கூடுமே
திட்டம் போடு சக்கைப் போடு சக்கைப் போடுதான்!

கலக்கு கின்ற காளை உன்றன் காலை முன்னெடு
விலக்கு கின்ற சங்கடத்தை இன்று வென்றெடு
துலக்கு கின்ற வைகறைக்கு முன்பெழுந்திடு
இலக்கு நன்று தூள்கிளப்பு தூள்கிளப்படா!

மண்டு கின்ற கும்மிருட்டு மாறப் போகுதே - பலர்
வண்ட வாளம் தண்ட வாளம் ஏறப் போகுதே!
கண்டு கேட்டு நாலும் கற்கத் திசைதிறக்குமே
உண்டு காலம் நல்ல காலம் நல்ல காலமே!

சாதனைக்கு விலைகொடுக்கச் சக்தி வேண்டுமே
சோதனைக்குத் தீர்வுகாணப் புத்தி வேண்டுமே
வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமே
போதினிக்க வெற்றிவேண்டும் வெற்றிவேண்டுமே!

Monday, March 13, 2006

கனவென்னும் கட்டெறும்பு



காய்ச்சலா என்று கேட்டு
நெற்றியில் கையை வைத்தாய்.
இல்லாத காய்ச்சல் சூடு
ஜிவ்வென ஏறக் கண்டேன்.

வேர்க்குதா என்று கேட்டு
மேலாக்கால் துடைத்து விட்டாய்.
இல்லாத வேர்வை பொங்கி
என்மேனி மூழ்கக் கண்டேன்.

தூசியா என்று கேட்டு
இதழ்குவித்து ஊதி விட்டாய்.
உலகமே தூசியாச்சு
உன்னிதழ் உலக மாச்சு.

கோணலா வகிடு என்று
சீப்பினால் சிலை வடித்தாய்.
மேகமாய் மிதந்து சென்று
காற்றுக்குத் தலை கொடுத்தேன்.

பசிக்குதா என்று கேட்டு
ஒற்றைவாய் ஊட்டிவிட்டாய்.
உறுபசி தன்னைத் தின்று
உயிர்ப்பசி ஊறக் கண்டேன்.

தூங்கென்று சொல்லிவிட்டுத்
தூரத்தில் புள்ளி யானாய்.
கனவென்னும் கட்டெறும்பு - என்
காலத்தைக் கடிக்குதேடி.


(13.3.06 காலை 10 மணிக்கு எழுதியது)

Sunday, February 26, 2006

தொட்டுப் போகும் (இசைப் பாடல்)




தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

குரல் மின்னிடும் இசை உன்னதம்
உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
கரு வண்டினம் வலம் வந்திடும்
அரு மலர்வனம் அதன் நறுமணம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

அருள் தூறிடும் அமுதூறிடும்
பொருள் மீறிடும் புதையல் தடம்
தலையாட்டிடும் மழலை மனம்
தாலாட்டெனும் தனி மந்திரம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

சிலை சித்திரம் நடை நாடகம்
ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
உரு மாறிடும் நிழல் ஓவியம்
கலை மேவிடும் மலை மாருதம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

கரை யாவையும் கரைத்தே எழும்
சிறை யாவையும் மறுத்தே எழும்
குறை யாவையும் அறுத்தே எழும்
நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
மனம் ஆடிடும் குடை ராட்டினம்
களி காதலின் துளிப் பாற்கடல்


(23.02.06)

Sunday, February 12, 2006

வானப் பரிசு


விடிய விடியக் கொட்டுது
விடிந்த பின்னும் சொட்டுது

முத்து முத்தாய்ச் சிதறுது
முரட்டுத் தனம் தெரியுது
பித்துப் பிடித்த பேய்மழை
பின்னிப் பின்னி எடுக்குது.

காணும் எங்கும் வெள்ளமே.
காணவில்லை பள்ளமே.
கோணம் கொள்ளை கொள்ளுமே
குளிர்ச்சி நம்மை அள்ளுமே.

பளீர் பளீர் மின்னலே
படார் படார் இடிகளே
சுளீர் சுளீர் சாரலே
தொடரும் தவளைப் பாடலே!

கருத்த வானம் மிரட்டுது
கையில் குடையைத் திணிக்குது
கருணை அற்ற காற்றதைக்
கையில் இருந்து பிடுங்குது.

நாடு நகரம் மிதக்குது
நதியும் கரையை உடைக்குது
காடு வயல் மூழ்குது
கடலும் எல்லை மீறுது.

கூடும் போதும் சிக்கலே
குறையும் போதும் சிக்கலே.
கோடு தன்னில் நிற்குமேல்
கோடி நன்மை கிட்டுமே!

வானப் பரிசு வருகவே!
மாதம் தோறும் பொழிகவே!
மானம் காக்கும் மாமழை
வருக வருக வருகவே!!