
கட்டுகள் எனக்குப் பிடித்தமில்லை.
சுமைகளை நான் வெறுக்கிறேன்.
இருளின் குடை விரியும்போது
என் இறக்கைகள் மடங்கிவிடுகின்றன.
நிபந்தனைகள் அதிகமுள்ள இடத்தில்
எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
உங்கள் மரபுகளை
மூட்டை கட்டி வையுங்கள்.
திணித்தலின் முதல் எதிரி நான்.
காலை முதல் இரவு வரை
என்ன செய்யவேண்டும் என்று
என் மூளையில் எழுதாதீர்.
எனக்கான நிகழ்ச்சி நிரல்களை
நானே எழுதிக்கொள்வேன்.
சட்டம், விதி, வழக்கம், முறை....
அய்யோ.. சர்வாதிகாரமே!
உனக்குத்தான்
எத்தனை புனைபெயர்கள்!
சுதந்திரம் என்ற பெயரில்
ஒரு சாக்லேட் கொடுத்தார்கள்.
பிரித்தால் ஒன்றுமில்லை.
காற்றே! என் முகத்தில் மோது.
ஒளியே! என் முன் நடனமிடு.
மழையே! என்னை நனை.
மண்ணே! எனக்கொரு மலர் கொடு.
பிரபஞ்சமே! எனக்குன் மடி வேண்டும்.
சுதந்திரமே!
ஏ... வெளிச்ச வார்த்தையே!
உனது கடலில்
ஒரு நதியைப் போல்
என் பெயர் கலக்கட்டும்!
( தினமலர் / 15-8-2000)
No comments:
Post a Comment