அண்ணாகண்ணன் கவிதைகள்: மற்றுமொரு விடுமுறை நாள்

Thursday, August 11, 2005

மற்றுமொரு விடுமுறை நாள்

முன்னொரு காலத்தில் நாங்கள்
விவசாயிகளாக இருந்தோம்.
சேற்றில் இருந்த எம் கால்கள்
வரப்புகளுக்கு ஏறின.

வரப்பிலிருந்து மண்சாலைக்கும்
மண்ணிலிருந்து தார்ச்சாலைக்கும்
தாரிலிருந்து சிமெண்டுச் சாலைக்கும்
மொசைக் தளங்களுக்கும்
ஏறிவிட்டன எம் கால்கள்.

காலில் மண்படுவது
அழுக்குப் படுவதாய்
அர்த்தமாகிவிட்டது.
செருப்பும் ஷூவும் அணிந்தே
நடக்க வேண்டும் என்று
எம் குழந்தைகளை வளர்க்கிறோம்.

மண்வாசனை
துர்நாற்றமாகிவிட்டது எமக்கு.

மீசை, தாடிகள் கூட
இறக்குமதியாகின்றன.

எமது உடைகள்
எமது உணவுகள்
எமது பண்பாடு
யாவும் புதைந்துபோயின.

எமது மண்ணிலிருந்து
எம்மை அந்நியமாக்கிவிட்டது
நாகரிகம்.

பொங்கல் எமக்கு
மற்றுமொரு விடுமுறை நாள்.

( தினமலர் பொங்கல் மலர் / 14-1-2001)

No comments: