அண்ணாகண்ணன் கவிதைகள்: தீபாவளி சங்கமம்

Monday, August 08, 2005

தீபாவளி சங்கமம்

(தீபாவளிக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்கள் இருக்கின்றன. எனினும் சுமார் 5 ஆண்டுகள் முன் நான் எழுதிய தீபாவளி தொடர்பான படைப்பை இங்கு பதிந்து வைக்கிறேன்.)

பொங்கலுக்கான பொங்கல்
கிருஷ்ண ஜெயந்தி முறுக்கு
கார்த்திகை கடலை உருண்டை...
பலகாரங்கள் பலவும்
சங்கமிக்கின்றன.

சுடிதார், புடைவை,
ஜீன்ஸ், வேட்டி....
கைக்குட்டையிலிருந்து
கோட் வரை
சேர்கின்றன துணிமணிகள்.

சக்கரம், சாட்டை,
ரயில், ராக்கெட்...
பொட்டு வெடி முதல்
பத்தாயிர வாலா வரை
குவிகின்றன வெடிகள்.

உற்றார், சுற்றம்,
நட்பு, உறவு...
அண்டைவீட்டார் முதல்
அயல்நாட்டார் வரை
கூடுகின்றனர் மனிதர்கள்.

கிருஷ்ணர், முருகர்,
அம்மன், சிவன்...
வீட்டிலுள்ள எல்லாக்
கடவுளர்க்கும்
பூசை, படையல்.

ஒரு லட்சுமி வெடி வெடித்தது.
சிதறிய தாள்களை எடுத்துப் பார்த்தேன்.
'...ணக்கத்திற்குரிய
அல்லா....'
'நீங்கள் இரட்சிக்கப்படுவீ...'
'...ரணம் கச்சாமி'
'...ள்ளையார்பட்டி விநா...'
'பெரியாரின் கண்'.

( தினமலர் 26-10-2000)

No comments: