அண்ணாகண்ணன் கவிதைகள்: மேலும் மூன்று கவிதைகள்

Monday, August 08, 2005

மேலும் மூன்று கவிதைகள்

படிக்கத் தகுந்த முகம்

முன்னும் பின்னுமாய்
எத்தனையோ பேர்
மிதிவண்டியில் போனாலும்
என்னைத்தான் கேட்கிறார்கள்:
"லிப்ட்'

தேநீர்க் கடைகளில்
எத்தனையோ பேர்
நுழைந்து வெளியேறினாலும்
என்னைத்தான் கேட்கிறார்கள்:
"சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு
ஒரு டீ வாங்கித் தாங்க சார்'

நேற்றுகூட
எதிர்ப்புறத்தில் இருந்து
கஷ்டப்பட்டுச் சாலையைக் கடந்து
ஒரு முதிய தம்பதியர்
என்னிடம் கேட்டார்கள்:
"பிள்ளைகளிடம் கோபித்துக்கொண்டு
வந்துவிட்டோம்.
இருந்த 400 ரூபாய் தீர்ந்துவிட்டது.
வேண்டும்
ஊருக்குப் போகப் பணம்'

முகத்தை எப்படியோ
படித்து விடுகிறார்கள்.
அவர்களின் படிப்பைப்
பொய்யாக்க வேண்டி,
சிரிக்காமல்
உர்ரென்று பார்க்கும் முயற்சிகளில்
தோற்றுப் போகிறது என் முகம்.

----------------------------------
விலங்குகளின் கால்களில் சலங்கைகள்

ஆட்றா ராமா ஆட்றா ராமா
ஜல்ஜல் ஜல்ஜல் ஜலக்கு ஜலக்கு
ஆட்றா ராமா ஆட்றா ராமா.

அய்யாவுக்கொரு தோப்புக்கரணம்
அம்மாவுக்கொரு ஆட்டம் பாட்டம்
அக்காவுக்கு நடந்து காட்டு
பாப்பாவுக்குப் பாய்ந்து காட்டு.
ஆட்றா ராமா ஆட்றா ராமா

நெற்றியில் நாமம் ஜோராய்ச் சொக்காய்
கையில் வளையல் கழுத்தில் மாலை
வேளாவேளைக்கு வாழைப் பழங்கள்
வீதி உலாக்கள்! வேறென்ன வேண்டும்?!
ஆட்றா ராமா ஆட்றா ராமா

வீதிகள் தோறும் வித்தையைக் காட்டு
எல்லோரிடத்தும் சில்லறை கேளு
கத்துக்கிட்டது காமிக்கத்தானே
தாவுடா ஜோரா வாயு குமாரா.
ஆட்றா ராமா ஆட்றா ராமா

விலங்கின் கால்களில் சலங்கை இருக்கு
சலங்கை மட்டுமா சங்கிலியும்தான்.

----------------------------------

யார் அந்த முதல் ஆள்?

தாழ்தனை நீக்கித் தாழ்வுகள் விலக்கிச்
சூழ்பகை எல்லாம் தூள்தூளாக்கி
பாழ்இருள் பொசுக்கிப் பரிபூரணமாய்
வாழ்வினை வாழ வருகின்ற மனிதன்
யார் அந்த முதல் ஆள்?

சோதனை ஒன்றையும் சாதனை ஆக்கி
வேதனை சுருக்கி வித்தகம் பெருக்கிப்
பூதனை ஏந்திப் போர்தனைப் புரிய
தீதினை எல்லாம் தீர்த்துக் கட்டுவோன்
யார் அந்த முதல் ஆள்?

அடிபடத் துணிந்து அவமதிப் புணர்ந்து
இடிபல தாங்கி இடர்களைத் தாண்டி
வடிவுற நிமிர்ந்து வானிடிப் பதற்காய்
முடிமுள் தாங்க முன்வரு கின்றவன்
யார் அந்த முதல் ஆள்?

( அமுதசுரபி - டிசம்பர் 2004)

No comments: