அண்ணாகண்ணன் கவிதைகள்: 3 கவிதைகள்

Thursday, August 11, 2005

3 கவிதைகள்

எதிரெதிர் துருவங்கள்

தீப்பெட்டிக்குள்
ஒரு பிஞ்சு விரல் இருக்கிறது.

பீடிக் கட்டுக்குள்
பால்மணம் வீசுகிறது.

வெடிகளைக் காய வைக்கையில்
கண்ணீர்த் துளிகள் ஆவியாகின்றன.

வாகனங்களைக் குளிப்பாட்ட
கிரீஸில் குளித்தபடி
தண்ணீர் பாய்ச்சுகின்றன
தளிர்கள்.

இவர்களுக்கு மட்டும்
எங்கிருந்து கிடைக்கின்றன
முட்டியை மறைக்கும் சட்டைகள்?

ஆடை எந்த நிறத்தில் இருந்தாலும்
அழுக்குச் சாயம் போட்டு,
கடைசியில் இவர்களிடம்
கறுப்பாகத்தான் வருகிறது.

படிக்கும் பிள்ளைகளுக்கு
வேலை ஒரு கனவு.
வேலை செய்யும் பிள்ளைகளுக்கோ
படிப்பு ஒரு கனவு.

கல்வியும் தொழிற்பயிற்சியும்
கலந்த அடிப்படைக் கல்விமுறை
எப்போது வரும்?

ஊர்போய்ச் சேர்க்காது
ஒற்றைத் தண்டவாளம்.

(இலக்கிய நந்தவனம் / நவம்பர் 2000)

நாங்களும் அரசர்களே

கொடி படை முடி
கொண்டவர்கள்
அரசர்கள் என்றால்
நாங்களும் அரசர்களே!

எங்களிடம்
துணி காயவைக்கக்
கொடி உள்ளது!
தண்ணீர் இன்றிக் குளிக்காததால்
அழுக்குப் படை உள்ளது!
தலையில் முடி உள்ளது!

(முல்லைச்சரம் / பிப்ரவரி 1997)

யாரும் இல்லாத் தீவில் நான்

எந்திரங்களின் கைகளில்
நம்மை ஒப்புக்கொடுத்த பிறகு
வாழ்வே ஒரு பொம்மலாட்ட மேடைதான்.

மனிதரை உடற்கூறிலும்
தீவை வரைபடத்திலும் தேடாதீர்.
அவை
மனத்தின் இடுக்கில்
மறைந்திருக்கின்றன.

பூமியை வீடாக்கியவர் நாம்.
வீட்டைத் தீவாக்க வேண்டாம்.

உலகம் என்ற இருபாலார் பள்ளியில்
உடல் என்பது பள்ளிச் சீருடை.
நான்
கனவு வீட்டிற்குத் திரும்பியதும்
உடலை ஹேங்கரில் மாட்டுவேன்.

எல்லையுள்ள எல்லாமே தீவுதான்.
தீவு என்று வந்துவிட்டால் நோவுதான்.

தண்ணீரை வற்றவைப்போம்.
இல்லையேல் தீவுகளை மூழ்கடிப்போம்.

(கதைச்சோலை / செப்டம்பர் 1998)

2 comments:

பிரதீப் said...

beautiful work! fantastic lines..

சிவகுமாரன் said...

வளமான தமிழ்

அழகான கவிதை.

வளர்க நும் பணி