அண்ணாகண்ணன் கவிதைகள்: சாலையைக் கடக்கிறார்கள்

Monday, July 19, 2004

சாலையைக் கடக்கிறார்கள்

என் அம்மா ரொம்ப அழகு
ஒளிபடைத்த கண் அவளுக்கு.
யோகாசனம் செய்வதுபோல
சோம்பல் முறிக்கிறபோது
சடசடவென நெட்டி முறியும்.

நாடோடியாக இருந்தாலும்
நாகரிகம் தெரிந்தவள்.
அமைதியானவள் தான்.
ஆனால், வீரத்திலும் தன்மானத்திலும்
நிகரற்றவள்.
வீண்வம்பு செய்வோரிடம்
பெரிய போராளியாகவே மாறிவிடுவாள்.

நாங்கள் ஆறு குழந்தைகளும்
ஒரே நேரத்தில்
அவள் முலைகளைக் கவ்விக் கடித்தாலும்
பொறுமையோடு பாலூட்டுவாள்.


அவளைக் காணவில்லை.
எங்கெங்கோ தேடினேன்.
கடைசியாக... அப்பாடா.
அதோ அவள்.
அகலமான சாலையின்
அந்தப் பக்கம் நிற்கிறாள்.
அவளும் என்னைப் பார்த்துவிட்டாள்.
கண்களில் என்ன ஒரு மலர்ச்சி.
வேகமாய் அசைகிறாள்.
நானும் அசைகிறேன்.

நகரம், அநியாயத்துக்கு
வளர்ந்துவிட்டது.
சீறிப்பாயும் வாகனங்களால்
சாலை நிரம்பியே கிடக்கிறது.

இதோ கொஞ்சம் இடைவெளி.
அவள் வருகிறாள்.
நானும் போகிறேன்.
பூதம்போல் திடீரென ஒரு வாகனம்.

இந்த வாகன ஓட்டி
வேகம் கூட்டியபடி சொன்னான்
''இதுங்களோட பெரிய ரோதணையாப் போச்சு''
அடுத்தடுத்த பூதங்களுக்கும்
கால்கள் இருந்தன.
கண்கள் இல்லை.
எண்ணற்ற சக்கரங்களில்
எமது உடல்கள் அடக்கமாயின.

சாலையைக் கடப்பதற்காக
எமது உடன்பிறப்புகள்
இன்னமும் அங்கே
நிற்கிறார்கள்,
அழகாக வாலாட்டியபடி.

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வேதனையாக இருக்கிறது.