அண்ணாகண்ணன் கவிதைகள்: உன் இன்னிசை

Wednesday, July 21, 2004

உன் இன்னிசை

காலம் விரைந்தோடுகிறது.
அந்த முத்தத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை.
அந்த மௌனத்தின் ஓசை
இன்னும் ஓயவில்லை.

நகரெங்கும் எதிரொலிக்கும்
தேவாலய - திருக்கோயில் மணியோசைபோல்
என் மனமெங்கும்
உன் பெயர் எதிரொலிக்கிறது.

மசூதியின் பாங்கோசை போல்
என் உள்ளத்தில் உன் பெயரால்
ஒரு நீண்ட ஆலாபனை
நிகழ்கிறது.

இடைவிடாது கதறும்
ஆலைச் சங்கொலிபோல்
உனக்காக என் உயிர்
கூக்குரல் இடுகிறது.

என் இதயத்திற்கு
இணையாக
விரைந்தோடுகிறது ரெயில்.

சிணுங்கும் இந்தத் தொலைபேசி
நான் மிக விரும்பும் பொருள்களில்
ஒன்றாகி விட்டது.

எல்லா ஓசைகளிலும்
உன் இன்னிசை
நிரம்பி வழிகிறது.

கண்ணே,
என் சுவாசம்
உன் வாசத்துக்காகக்
காத்திருக்கிறது.

No comments: