அண்ணாகண்ணன் கவிதைகள்: ஒன்றுக்குள் ஒன்று

Thursday, July 22, 2004

ஒன்றுக்குள் ஒன்று

அவிழ்ந்து சுருள்விரிந்து
உன் இடைதழுவும் கூந்தல்
என் விரல்களின் நீட்சியென்று அறிவாயா?

உன் இமைகளுக்கிடையே
என் லப்டப் ஒசை
கேட்பது தெரிகிறதா?

நிறமிழந்த என் குருதியே
உன் திருவாய்க்குள்
ஊற்றெடுக்கிறது

செல்லச் சிணுங்கலுடன் சிரிக்கும்
உன் வளையல்களுக்கிடையே
என் நாக்கு
நர்த்தனமிடுகிறது.

செழித்திருக்கும் உன் இளமையை
என் கனவுகள்
காத்து நிற்கின்றன.

இறுக்கி அணைத்து
முனை படபடக்கும்
அந்தச் சேலை
என் தேகமேயன்றி வேறில்லை.

உன் உயிரின்
அத்தனை வாசலிலும்
யாழ்மீட்டி நிற்கிறது
என் ஆன்மா.

No comments: