அண்ணாகண்ணன் கவிதைகள்: ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

Thursday, July 15, 2004

ஒரு தீபம் ஏற்றுகிறேன்!



பெரிய கருப்பையில் இருந்து
சிறிய உலகிற்கு வந்திருக்கும்
இந்தக் குழந்தையின் புன்னகைக்கு
எந்தச் சேதமும் நேராதிருக்க
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

பள்ளி செல்லும் சிறுவனுக்கும்
அவனுக்கு டாட்டா காட்டியபடி
பொட்டலம் மடிக்கும் பொடியனுக்கும்
இடையிலுள்ள தூரம் இற்றுவிழ
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

வேலையோடு கண்ணா மூச்சி
ஆடுவோருக்கு
வேலை கிடைக்கவும்
வேலையில் இருப்போர்
உழைக்கவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

சீர் கேட்டுச் சீறாத
புகுந்தவீடு வாய்க்கவும்
நரகத்தைக் காட்டாத
நல்மனைவி தகையவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

தீய பழக்கத்தின்
திரியினைப் பற்றவைத்து
வெடித்து நாம் சிதறுகிற
விபரீத அபராதம் விலக
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

ஈடில்லா நாகரிகம்
கோடில்லா மனிதநேயம் அமைந்து
காடு வளரவும்
காற்று தவழவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

மனக்குளத்தில் தூரெடுக்கவும்
மண்ணிலிருந்து போரெடுக்கவும்
உடம்புள் மட்டும் ரத்தம் ஓடவும்
கன்னம் யாவிலும் முத்தம் ஓடவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!


அமுதசுரபி, தீபாவளி மலர் 2003

3 comments:

Ganesh Venkittu said...

sir, you made me cry by reading that stanza "palli sellum siruvanukkum"...

if only politicians can make india a better nation....

with dreams
ganesh venkittu

வீரமணி said...

kavihikal nantru...

vettha.(kovaikavi) said...

ஈடில்லா நாகரிகம்
கோடில்லா மனிதநேயம் அமைந்து
காடு வளரவும்
காற்று தவழவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!
Vetha. Elangathilakam,
Denmark.