அண்ணாகண்ணன் கவிதைகள்: மரண ஊர்வலத்தின்முன்

Sunday, July 18, 2004

மரண ஊர்வலத்தின்முன்

மரண ஊர்வலத்தின் முன்
நான் நடனம் ஆடுகிறேன்.
சீழ்க்கை ஒலிக்கும்
வெடிச் சத்தத்திற்கும் நடுவில்
நான் அபிநயிக்கிறேன்.

அழுகையும் மௌனமும்
அடர்ந்த கூட்டத்தின் முனை நான்.
மயானத்தை நோக்கிய பாதையில்
வாழ்வின் தத்துவங்களை விளக்கியபடி
சுழன்றுச் சுழன்று
துள்ளித் துள்ளி
நகர்ந்தபடியே போகிறது என்
நாட்டியம்.

என் ஆடைக்கு வரையறை இல்லை.
என் அசைவுக்கு இலக்கணம் இல்லை
என் மேடைக்கு எல்லைகள் இல்லை
நவரசங்களின் கலவையாக
அறுசுவைகளின் சேர்க்கையாக
நிற்காத காற்றாக
நான் ஆடுகிறேன்.

உயிரற்றவற்றை ஏந்தும் மனிதரைப்
பரிகசித்தபடி
லட்சியங்களின் வீழ்ச்சிக்கு வருந்தியபடி
கொடுமையின் தோல்விக்கு மகிழ்ந்தபடி
எண்ணற்ற உணர்வுகளோடு
நான் ஆடுகிறேன்.

வேகமாக வெகு வேகமாக
நகர்கிறது என் உடல்.
அகராதியில் இல்லாத சொற்களோடு
என் மொழி.
சமுதாயத்தைப் பிரதிபலிக்கிற
ஒரு கண்ணாடியாக என் முகம்.
கனவுகளோடு உரையாடும்
எனது மனம்.
எந்த நேரத்திலும்
எந்த நிலத்திலும் பதியலாம்
எனது கால்.

1 comment:

பால கணேஷ் said...

அடேயப்பா... 2004லேயே இதை எழுதி விட்டீர்கள். நல்ல கவிதை.