அண்ணாகண்ணன் கவிதைகள்: ஒருமுழுக்குப் போடுவாய்!

Saturday, September 28, 2013

ஒருமுழுக்குப் போடுவாய்!

உடற்களைப்பு நீங்கவே
உளக்களிப்பு ஓங்கவே
சுடர்முகத்தில் பற்றவே
சுறுசுறுப்பு தொற்றவே
அடர்நலன்கள் சூழவே
அழகொளிர்ந்து வாழவே
உடன்அழுக்கு போகவே
ஒருமுழுக்குப் போடுவாய்!
 

உயிர்த்துடிப்பு கூடவே
உயர்சிறப்பு தேடவே
துயில்களைந்து துள்ளவே
துயர்தொலைந்து வெல்லவே
வயித்தியங்கள் தள்ளவே
வலிகழன்று செல்லவே
ஒயில்முழுக்கக் கொள்ளவே
ஒருமுழுக்குப் போடுவாய்!
 

கயல்இனம் கடிக்கவே
காற்றெழுந்து அடிக்கவே
நயந்திசை படிக்கவே
நரம்புகள் முடுக்கவே
செயலுரம் செழிக்கவே
சிந்தைவேர் விழிக்கவே
உயரவே உயிர்க்கவே
ஒருமுழுக்குப் போடுவாய்!
 

கலக்கமா? சுணக்கமா?
கவலையா? வருத்தமா?
இலக்கிலே விலக்கமா?
இறுக்கமா? இறக்கமா?
இலையெனும் நடுக்கமா?
இவையனைத்தின்உச்சியை
உலுக்கியே உலுக்கியே
ஒருமுழுக்குப் போடுவாய்!
=====================

No comments: