அண்ணாகண்ணன் கவிதைகள்: கிலோ என்ன விலை? (சிறுவர் பாடல்)

Sunday, July 31, 2005

கிலோ என்ன விலை? (சிறுவர் பாடல்)

கவலை, கிலோ என்ன விலை?
அலை அலையாக அல்லல் வந்தாலும்
சுளை சுளையாகச் சுவைக்கும் மனமே!
கவலை, கிலோ என்ன விலை?

இல்லை மாட்டேன் முடியாது - என
எதற்கெடுத் தாலும் சொல்லாதே!
எல்லை இல்லாப் பேரின்பம் - உன்
"இம்'மெனும் சொல்லில் ஆரம்பம்!

இயங்கிக் கொண்டே இருகண்ணே
இன்னும் உண்டு வெகுதொலைவு
புயலிடம் வேகம் கற்றுக்கொள்
ப்பூவென ஊது; தடையோடும்!

கண்ணீர் வியர்வை குருதியெனக்
காலக் கிண்ணியில் திரவங்கள்!
மண்ணின் வளர்ச்சி அனைத்திற்கும்
மையம் வியர்வை நாளங்கள்!

நிகழ்காலத்துள் வாழ்ந்திட வா
நேரிய வழியில் நடந்திட வா
புகழ்காலத்துள் புகுந்திட வா
புள்ளி வாழ்வைப் புதுக்கிட வா!

No comments: