அண்ணாகண்ணன் கவிதைகள்: புள்ளிக் கவிதைகள்

Saturday, July 30, 2005

புள்ளிக் கவிதைகள்

வெள்ளத்தில் விழுந்த
சருகின்மேல்
உறங்கிக்கொண்டே
சிரிக்கிறது எறும்பு!
---------------------------------
எறிந்த வடையை
அந்தரத்திலேயே
பிடித்தது
காக்கை.
---------------------------------
சுதந்திரக் கிளி
என்றேனும் சொன்னதுண்டா
சோதிடம்?
---------------------------------
'என்னைக் கொல்லாதே'
எமனிடம் மன்றாடியது
எருமை!
---------------------------------
குற்றவாளிகளின்
அடையாள அணிவகுப்பில்
நின்றவர்,
ஏற்கிறார்
அணிவகுப்பு மரியாதை!
---------------------------------
'முட்டாள் பெட்டி'
இருக்குமா இப்பெயர்...
நீங்கள்
அறிவாளியானால்?
---------------------------------
நூறு ஈர்க்கை
ஒன்று சேர்த்தால்
உன் கையில்
விளக்குமாறு!
---------------------------------
நதிக்குள்
ஓடுகிறது
வாய்க்கால்!
---------------------------------
கைத்தடியைத்
தட்டித் தட்டித்
தடம் பார்க்கிறார்கள்
ஞானப் பார்வை உள்ளவர்கள்!

1 comment:

குழலி / Kuzhali said...

எல்லா கவிதையும் மிக நன்றாக உள்ளது

சுதந்திரக் கிளி
என்றேனும் சொன்னதுண்டா
சோதிடம்?

நச்