அண்ணாகண்ணன் கவிதைகள்: தோசை நாடு தமிழ்நாடு!

Thursday, May 24, 2007

தோசை நாடு தமிழ்நாடு!

அவர்ஒரு திட்டம் போடுகிறார்
இவர்அதைத் தூக்கிப் போடுகிறார்
இவர்ஒரு திட்டம் போடுகிறார்
அவர்அதைத் தூக்கிப் போடுகிறார்
போட்டதைத் திருப்பிப் போடுவதில்
போட்டா போட்டி போடுகிறார்
சூட்டோ டு திருப்பிப் போடுவதால்
தோசை நாடு தமிழ்நாடு!

குட்டி குட்டியாய்க் கட்சிகள் - அவை
கூட்டணி சேரும் காட்சிகள்
குட்டிக் கரணப் பட்சிகள் - ஒரே
குட்டையில் ஊறிய மட்டைகள்
கட்சிப் பெயர்கள், கொடிநிறங்கள்
மாறினும் கொள்கை மாறாது.
தட்டினில் மாவு வேகிறது
இட்டிலி நாடு தமிழ்நாடு!

காவிரி, முல்லைப் பெரியாறு,
கற்பு, மீனவர், ஒதுக்கீடு
காவி பச்சை இளநீலம்
கருப்பு சிவப்பு எனமோதல்.
எல்லை இல்லாச் சிக்கல்கள் - இடை
இடையே கொஞ்சம் விக்கல்கள்
கலகக் கூடு! ஓபோடு! -
இடியாப்ப நாடு தமிழ்நாடு!

டாஸ்மாக் லாபம் குவிக்கிறது
இலவச வணிகம் நடக்கிறது
வீங்கிக் கிடக்குது விலைவாசி
அழுது கிடக்குது தொலைக்காட்சி
கொசுக்கள், நோய்கள் குறைவில்லை!
பொசுக்கும் கோடை வெயிலிலே
கொப்புளம் பொங்கும் திருநாடு
பொங்கல் நாடு தமிழ்நாடு!

நன்றி: தமிழ்சிஃபி

2 comments:

Anonymous said...

போட்டு திருப்பிப்போட்டது வாட்டியெடுத்து
இடியப்பச் சிக்கலில் சிக்க வைத்தது ஈழத் தமிழர்களையும் தானய்யா

Agathiyan John Benedict said...

உண்மைதான். நல்ல படைப்பு. இந்த "ஏட்டிக்குப் போட்டி" அரசியலுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும், அய்யா. எதாவதொரு நல்ல வழி இருந்தா சொல்லுங்களேன்...