அண்ணாகண்ணன் கவிதைகள்: தமிழின் மிக எளிய மாலை மாற்று

Friday, February 12, 2010

தமிழின் மிக எளிய மாலை மாற்று


முகநானூறு என்ற தலைப்பில் இலக்கியப் பாசறை இதழில் நான் வெண்பாத் தொடர் ஒன்று எழுதினேன். அதில் சில மாலை மாற்றுகளையும் சித்திரக் கவிகளையும் சில இதழ்களில் தொடர்ந்து எழுதினேன். மாலை மாற்று என்பது, தலைகீழாகத் திருப்பிப் படித்தாலும் அதே பாடல் மீண்டும் வருமாறு எழுதுவது. மார்ச், ஏப்ரல் 1997 இதழில் 'வாய்' என்ற தலைப்பில் வெளியான அத்தியாயத்தின் முதற்பாடல் இது:

வாய்போல் சரிவில் தினமழை கோணிபிடி
கோவில் தோத்தோத் தோத்திரமயம் - ஆம்ஆம்
யமரதித் தோத்தோத் தோல்வி கோடிபிணி கோழை
மனதில் விரிசல் போய்வா.

நான் படித்த மாலை மாற்றுகள் பலவும் கடுமையான மொழி நடையில் இருந்தன (எ.கா: திருஞானசம்பந்தரின் மாலைமாற்று திருப்பதிகம்). எனவே படிப்பதற்கு எளிய வடிவில் அவற்றை எழுத இயலுமா என முயன்றதன் விளைவே இது. நான் படித்த வரையில், தமிழில், நான்கு அடிகளில் எழுதப்பெற்ற மாலை மாற்றுகளிலேயே இதுதான் படிக்க மிக எளிதானது.வேறு எளிய பாடல் இருந்தால், என் கவனத்திற்குத் தாருங்கள்.

இப்பாடல், பற்பல பொருள்களை அளிக்கக் கூடியது.

அதிகம் பேசுபவர்களின் வாயிலிருந்து சொற்கள் தினந்தோறும் மழையெனப் பொழிகின்றன. அவற்றைக் கோணியிலே பிடிக்க முயன்று பார். சிலர் கோவிலில் வாழும் தெய்வம் எனப் புகழ்ந்து, தோத்திரங்கள் படிப்பார்கள்; வேறு சிலரோ நாயின் குரைப்பொலி போல் தூற்றுவார்கள். இதற்கும் ஆம் என்று சொல்; அதற்கும் ஆம் என்று சொல். இரண்டையும் சமமாகக் கருது.

மரணத்தைப் போன்றும் ரதியைப் போன்றும் சொற்கள் உண்டு. சூழலைப் பொறுத்து, மன நிலையைப் பொறுத்து, ஒரே சொல்லே அவ்வாறு இரு விதங்களாகவும் இருக்கலாம். அவை நம் பின்னால் நாய் போல் தொடர்ந்து வருகின்றன. அவற்றுள் எந்தப் பொருளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும். சொல்லின் பொருளைத் தவறுதலாக எடுத்துக்கொண்டால் அதனால் உனக்குத் தோல்வியும் கோடி பிணிகளும் கிட்டும்.

எந்தப் பொருளை எடுக்கிறாயோ, அதற்கு நேர் எதிரான பொருள் (நல்ல பொருளை எடுத்தால், அல்லாத பொருளும் அல்லாத பொருளை எடுத்தால் நல்ல பொருளும்), தோற்ற நாயின் தன்மையுடன் ஆங்காரத்துடன் பின்தங்கி, ஓடி மறையும். ஆயினும் உன் கண் எதிரேயே அடிக்கடி தோன்றும். கல்லெடுத்து விரட்டினால், முற்றிலும் கண்ணை விட்டு அகன்றாலும் அதன் குரைப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கும்.

சொல்லின் பொருளை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர் கோழையாகக் கருதப்படுவார். இவ்வளவு சொல்கிறாயே, இப்பொழுது நான் எந்தப் பொருளை எடுப்பது எனப் பெரிதும் குழம்புகிறேன். இதனால் என் மனதில் விரிசல் உண்டாகிவிட்டது. நான் இன்னும் அமைதியாகச் சிந்தித்துத்தான் முடிவு எடுக்க வேண்டும். இப்பொழுதைக்கு நீ போய் வா.

மேலும் விளக்கங்கள்:

வாய்போல் சரிவில் தினமழை என்பதே பல்வேறு பொருள்களுக்கு இட்டுச் செல்கின்றன. வாயிலிருந்து தொண்டைப் பகுதி கீழிறங்குவது போன்ற அமைப்புடைய அந்த மலைச் சரிவில் சந்திப்போம். என்னைத் தினமும் அழை என்றுகூட பொருள் கொள்ளலாம். இங்கு வாய், சரிவு, மழை ஆகியவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்பக் குறியீடுகளாக மாற்றிவிட முடியும்.

கோணியில் ஒரு சொல்லைப் பிடித்தல் என்பது, நிறைய சிந்திக்க வைப்பது. கோணியின் நிறைய புத்தகங்களைப் பிடிக்கலாம். புத்தகங்கள் முழுக்க இருப்பவை சொற்கள். பிடித்து வைப்பதற்கு உரிய சொற்களா? போகட்டும் என விடுவதற்கு உரிய சொற்களா? பிடித்து அளந்து பார்த்தால் தெரிந்துவிடும், அதன் கனம். சரி, பேசும் சொற்களை, அதாவது ஒலியைப் பிடிக்க இயலாதா? அதற்குத்தான் நிறைய கருவிகள் உள்ளனவே. அந்த ஒலிப் பதிவு வட்டுகளை, சிப்புகளை எல்லாம் கோணியில் பிடிக்க முடியும்தானே. சரி, காற்றில் ஒலி அலைகள் பரவுகையில் காற்றாகவே அவற்றைப் பிடிக்க இயலும்தானே. அதற்கு ஏற்றதாக அந்தக் கோணி இருக்க வேண்டும். அவ்வளவுதான். இங்கு கோணி என்பதை மனம் என்றும் கொள்ளலாம்.

கோவில் என்பதும் ஆலயத்தையும் குறிக்கலாம்; மன்னனின் வில் என்பதையும் குறிக்கலாம். மன்னனின் வில்லின் வேகத்துடன் சொற்கள் பாய்வதாகக் கருதலாம்.

தோத்தோ என்பது நாயைக் குறிக்கும் சொல் எனினும் ஓரிடத்தில் நாயின் குரைப்பொலியையும் அடுத்த இடத்தில் பின்னே அலையும் அதன் இயல்பையும் சுட்டி நிற்கிறது.

யமரதி என்பதும் பல்பொருட் சொல். மரணத்தைப் போன்ற அழகுடைய ரதி, ரதியைப் போன்று அழகுடைய மரணம் என இரு வழிகளிலும் பொருள் கொள்ளலாம்.

ஏதோ எனக்குத் தோன்றிய சில பொருள்களைக் கூறினேன். சொற்கள், யானையின் வால் போல் ஒரு முனையே. அவற்றைப் பின்பற்றிச் சென்றால், நாம் நிச்சயமாக வழி தவறுவோம். புரியாத இடத்தில் நின்றபடி வழிதேடி அலைகையில் நாம் எதிர்பாராத புதிய பாதைகள் ஆயிரம் ஆயிரமாய் கிட்டும்.

8 comments:

ISR Selvakumar said...

அண்ணா கண்ணன்,
தமிழில் இது போல சுவாரசியங்கள் தெரியாமலேயே பல தலைமுறைகள் வளர்ந்திருக்கின்றோம். பிரமாதம்! விருதுக்கு தகுதியானவர் என்பதற்கு இன்னுமொரு சான்று.

kargil Jay said...

it is still not easy to understand to my under deveoloped brain..

but amazing...

kargil jay

kargil Jay said...

great.. anna kannan..

i am thrilled, humbled, amazed...

still this poetry is not understandable for pseudo developed brain like mine..

Agathiyan John Benedict said...

திருமிகு அண்ணாகண்ணன்,

நலமா? உங்களது மாலை மாற்றைப் புரிந்துகொள்ளச் சற்று தாமதமானது; ஆனால் புரிந்தபிறகுதான் அதன் சிறப்பு எனக்குப் புரிந்தது. வெகு அருமை. பாராட்டுகள். நன்றி.

ஆடுமாடு said...

நல்ல முயற்சி.

நல்லாருக்கு, வாழ்த்துகள்.

ஏக்நாத்.

naanjil said...

We learned about this in the last Tamil Illakiya Kootam in Maryland.
Thanks for your excellent writing.

peter

arangan 8939954704 said...

ungal venbavil thaLai thattugiradu.
moondraam adiyil venthaLai varavillai. meelum aigaarathai kurilaga kondaal thaan mudaladi thalai thattaadu varugiradu. avvaaru kolla thangal paadalil idam illai.venba ilakkanappadi ezudinaal thane adu venba aagum munaivarae.
arangan
chennai

முனைவர் அண்ணாகண்ணன் said...

இந்த வெண்பாவைக் கீழ்க்கண்டவாறு சீர் பிரித்தால், தளை தட்டாது:

வாய்போல் சரிவில் தினமழை கோணிபிடி
கோவில்தோத் தோத்தோத் திரமயம் - ஆம்ஆம்
யமரதித்தோத் தோத்தோல்வி கோடிபிணி கோழை
மனதில் விரிசல் போய்வா.