அண்ணாகண்ணன் கவிதைகள்: டிஸ்கவரி (சிறுவர் பாடல்)

Saturday, September 03, 2005

டிஸ்கவரி (சிறுவர் பாடல்)

வந்தது வந்தது டிஸ்கவரி
வாகை சூடிய வானூர்தி

சீறி எழுந்தது பார்த்தாயா?
தீப்புகை கக்கிப் புவியீர்ப்பை
மீறி எழுந்தது பார்த்தாயா?
மீண்டு(ம்) வந்தது ஆர்த்தாயா?

ஏழு பேர்கள் பறந்தார்கள்
எண்ணிய பணிகள் முடித்தார்கள்
வாழும் விண்வெளிக் கப்பலிலே
வல்லமை காட்டி வந்தார்கள்.

கலத்தின் முனையில் ஒருபாகம்
கழன்று விழுந்த அப்போதும் - மன
நலத்தில் உயர்ந்த வீரர்கள்
நன்றே புரிந்த சூரர்கள்.

கண்ணுள் நிற்கும் கல்பனா
காற்றில் கரைந்த கொலம்பியா
இன்னும் நினைவில் ஆடுகையில்
இனிக்க வந்தது நற்செய்தி.

ஆகா நாசா, வாழ்த்துகள்!
ஆசை எமக்குள் ஊறுதே!
ஆக்கம் மிகுந்த ஆகாயம் - நாளை
அதுதான் எங்கள் மைதானம்!

(அமுதசுரபி / செப்டம்பர் 2005)

No comments: