அண்ணாகண்ணன் கவிதைகள்: September 2010

Saturday, September 04, 2010

சில நேரங்களில் சில உயிரினங்கள்

வாலைத் தூக்கிக்கொண்டு
ஓடி வந்த அணில்,
திறந்த கதவினுள்
எட்டிப் பார்க்கிறது.

பரணில் ஒளிந்திருந்த பூனை
திடுக்கென இறங்கி ஓடியது.
'குட்டி போட்டுவிடப் போகிறது'
அஞ்சினாள் அம்மா.

சமையல் மேடையில்
அடிக்கடி உலவுகின்றன
பல்லிகள்.

குளியலறையிலிருந்து
குதித்துத் தாவுகின்றன
தவளைக் குஞ்சுகள்.

கரப்பான்களுடன்
அவ்வப்போது நிகழ்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம்.

ஒட்டடை தட்டும்போதெல்லாம்
தப்பிவிடுகிறது சிலந்தி.

ஒரு படையெடுப்பு
எப்படி இருக்கும் என
எறும்புகள் கற்பிக்கின்றன.

எறும்புகள் மொய்த்த முறுக்குகளை
வெயிலில் காயவைத்தேன்.
கவ்விச் சென்றது காக்கை.

மின்விசிறியை ஏமாற்றி,
என்னை எங்கே, எப்படி
கடிக்க வேண்டும் எனக்
கொசுக்களுக்குத் தெரியும்.

இவற்றிடமிருந்து தப்பிக்க,
அனைத்து ஜன்னல், கதவுகளை
மூடி வைத்தேன்.
மூச்சு முட்டியது
வியர்வை பெருகியது.

எல்லாக் கதவுகளையும்
திறந்துவிட்டேன்.

முக்கியம்தான்
என் மூச்சு எனக்கும்
அதன் மூச்சு அதற்கும்.

================================
நன்றி - வடக்கு வாசல், செப்.2010

கிரகம் பிடித்து ஆட்டுகிறது




‘உன் கிரகம் சரியி்ல்லை’
என்ற ஜோதிடனைப் பார்த்துக் கேட்டேன்:
‘உனக்கு எப்படிப்பட்ட கிரகம் வேண்டும்?

காற்றும் நீரும் வெளிச்சமும்
எந்த விகிதத்தில் இருக்கலாம்?
அங்கே உயிரினங்களின்
உருவும் நிறமும் குணமும்
எவ்வாறு அமையலாம்?
என்னிடம் சொன்னால்
ஆவன செய்கிறேன்.

வானில் அதை
எங்கே நிலைநிறுத்தட்டும்?
இங்கேயா? அங்கேயா?
அது எப்படிச் சுழல வேண்டும்?
இடப்புறமா? வலப்புறமா?

நம் விருப்பப்படி இரவு பகல்களை
சுருங்கி விரியச் செய்யட்டுமா?
துணைக்கோள் ஏதும் வேண்டுமா?'

'………………………….'
ஓட்டம் எடுத்தான் ஜோதிடன்.
கிரகங்கள் இரகசியமாய்க் கண்சிமிட்டுகின்றன.


===========================
படத்திற்கு நன்றி – http://a1star.com
முதல் பதிப்பு:  http://www.vallamai.com/?p=631