அண்ணாகண்ணன் கவிதைகள்: February 2009

Wednesday, February 25, 2009

தூக்கக் கணக்கு (சிறுவர் பாடல்)

இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன்
இழுத்துப் போர்வை போர்த்துகிறேன்
அன்பே அழகே ஆருயிரே
அதற்குள் என்னை எழுப்பாதே!

உளறி அலறுது கடிகாரம் - அதன்
உச்சந் தலையில் குட்டுவை
வெளிச்ச வெள்ளம் பாய்கிறது - அதை
வெளியே தள்ளிக் கதவைஅடை!

வேலை ஒருபுறம் இருக்கட்டும் - பிறகு
வேக வேகமாய் முடித்திடுவேன்
வேலை முடியா விட்டாலும்
வேண்டிய காரணம் சொல்லிடுவேன்.

இப்போ தைக்கு என்னைவிடு
இன்னும் கொஞ்சம் தூங்கவிடு
சொப்பனம் கெடுக்க வாராதே - என்
சொத்தை உனக்கே எழுதுகிறேன்!

இப்படிச் சொன்னவர் இன்றில்லை
இருட்டில் கரைந்து போய்விட்டார்!
அப்புறம் என்று சொன்னவரை
அப்புறம் எங்குமே காணவில்லை!

அளவு கடந்தால் போதையிது
ஆளை விழுங்கும் பெருந்தீது
களவுத் தூக்கம் வேண்டாமே
கணக்காய்த் தூங்கக் கற்போமே!

உதய நாழிகை உற்சாகம்
உள்ளம் மலரும் உயிர்வளரும்
முதிய கதிரை முந்தியெழு
மொத்த மாகக் கொண்டாடு!