அண்ணாகண்ணன் கவிதைகள்: December 2007

Thursday, December 20, 2007

சில பறவைகள்; சில காட்சிகள்

காலையில் ஒரு கிளியைப் பார்த்தேன்.
எங்கோ
அவசரமாகப் பறந்துகொண்டிருந்தது.

** ** **

மின்சாரக் கம்பி மீது
ஊஞ்சலாடுகின்றன
சிட்டுக் குருவிகள் சில.

** ** **

அவ்வப்போது நிமிர்ந்து பார்த்தபடி
தன் குஞ்சுகளுடன்
கூட்டமாக மேய்கிறது கோழி.

** ** **

மரமே இல்லாத என் வீட்டு
மதில் சுவரில்
நெடுநேரமாய் அமர்ந்திருக்கிறது
மரங்கொத்திப் பறவை.

** ** **

ஓடாத கூவத்தில்
படுத்துக் கிடக்கிறது எருமை.
எருமையின் மீது
நின்றுகொண்டிருக்கிறது கொக்கு!

** ** **

வண்ணத்துப் பூச்சி
உட்காரும் நேரத்தைவிடப்
பறக்கும் நேரமே அதிகம்!

========================

நன்றி: தமிழ்சிஃபி