அண்ணாகண்ணன் கவிதைகள்: அரசியல்
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, April 08, 2009

இவர்கள் மக்கள் தலைவர்கள்!

'எவ்வளவு செலவு செய்வீர்கள்?'
எம்.பி. தேர்தல் நேர்காணல்!
நன்கொடை தந்தால் கவனிப்பு!
நல்கா விட்டாலும் 'கவனிப்பு!'

எத்தனை தொகுதி? எத்தொகுதி?
எந்தச் சாதி? என்ன நிதி?
இரகசிய பேரம் எதற்காக?
வெளிப்படைப் பேரம் வந்தாச்சு!

நிரந்தர நண்பர் இங்கில்லை
நிரந்தர எதிரியும் கிடையாது
சேரவும் விலகவும் காரணங்கள்
சிரிக்க வைக்கும் நாடகங்கள்!

புதிதாய் ஒருவர் சேருகையில்
இவரால் நமக்கு வலுவென்பார்!
அவரே விலகிச் செல்லுகையில்
பாதிப்பு ஏதும் இல்லையென்பார்!

பச்சைத் துரோகம் என்றவரே
சிவப்புக் கம்பளம் விரித்திடுவார்!
வாழ்த்தும் வாயே வசைபாடும்
வைத வாயே வாழ்த்துரைக்கும்!

நேற்றைய பேச்சு நேற்றோடு
இன்றைய பேச்சும் இன்றோடு!
இவர்கள் மக்கள் தலைவர்கள்
ஐயோ பாவம் தொண்டர்கள்!

கொள்கை எல்லாம் எதற்காக?
இராஜ தந்திரம் தெரியாதா?
கூட்டணி என்பது பொருந்தாது
இதுவொரு தொகுதி உடன்பாடே!

எதுவும் பேசலாம்! மறுத்திடலாம்!
எந்த எல்லைக்கும் சென்றிடலாம்!
மறதி நிறைந்த சமுதாயம்
போடா போடா வெங்காயம்!

=============================================

நன்றி: சென்னை டைஜஸ்ட், மார்ச்சு 27 - ஏப்ரல் 02 2009

Sunday, July 15, 2007

மகராசர் காமராசர் (சிறுவர் பாடல்)



வாசிக்கக் கல்விச் சாலை
வயிற்றுக்கு நல்ல சோறு!
தேசத்தின் வளத்தைக் கூட்ட
திக்கெட்டும் அணைகள்! ஆலை!
யோசிக்கும் நொடியில் இந்த
யுகம்வெல்லும் மனித நேயர்!
மாசில்லை எனப்பார் போற்றும்
மகராசர் காம ராசர்!

வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
வகுப்புகள் ஆறே கற்றார்!
பாட்டாளி அவரின் பேரில்
பல்கலைக் கழகம் இன்று!
வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
மீட்பராய் வந்து காத்தார்!
நேயத்தின் எளிய செல்வர்
நிகரில்லாக் காம ராசர்!

---------------------------------
ராணி காமிக்ஸ் இதழில் (2002இல் என்று நினைவு) வெளிவந்தது.