அண்ணாகண்ணன் கவிதைகள்: வாழ்த்துப் பாடல்
Showing posts with label வாழ்த்துப் பாடல். Show all posts
Showing posts with label வாழ்த்துப் பாடல். Show all posts

Thursday, February 11, 2010

மகுடம் விரும்பாத கோ

(கவிக்கோ ஞானச்செல்வன் 70ஆம் அகவை நிறைவினை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துப்பா)

பிரம்பில்லா ஆசிரியர்; பிள்ளைமனச் சீலர்;
வரம்பில்லா நேயர்;உளத் தூயர் - நரம்பில்லா
நாவால் தமிழாளும் நாவலர்; கட்டழகுப்
பாவால் உலகளப் பார்.

சிவஞானத் தொண்டர்; தியாகியின் மைந்தர்;
தவமாய்த் தமிழ்கற்ற தக்கார் - நவமாய்
வகுப்பெடுத்த வல்லார்; வழிகாட்டும் நல்லார்;
மகுடம் விரும்பாத கோ.

நன்னூல் படித்ததுடன் நன்னூல்கள் ஆக்கியவர்;
தன்னுள் தனைக்காண் தகவாளர் - புன்னகையால்
மேடைத் தமிழை மெருகேற்றும் பாவலர்க்குள்
கோடை மழையின் குளிர்.

நற்பண்பு, நற்செயல், நற்சொல் இவையெல்லாம்
ஒற்றை உருவில் ஒளிகூட்ட - நற்பயனாய்
நற்குடும்பம், நற்புகழ், நட்பு இவையெல்லாம்
பெற்றார் பெரிதின் பெரிது.

எதுதமிழ் என்றுபலர் இங்கே குழம்ப,
இதுதமிழ் என்றே இயம்பும் - மதுரகவிக்
கோஞானச் செல்வன் கொளுத்தும் சுடரிதனால்
பூஞாலம் வாழும் புலர்ந்து.

எண்ணியவை ஈடேறி, இன்பக் களிதுள்ள,
எண்ணாச் சிறப்புகளும் எய்திடுவீர் - திண்ணம்
நொடிதோறும் வாழ்ந்துவளர் நூற்றாண்டின் ஒவ்வோர்
விடியலையும் காண்பீர் வியந்து.

Thursday, January 14, 2010

வாழ்த்துப் பாடல்

வாழ்வு மலரும்; மனம்கனியும்; அன்புமிகும்;
தாழ்விலகும்; வெற்றி தழைக்கும்;சீர் - சூழும்எழில்
வல்லமை கூடும்; வலியினிக்கும்; மண்ணொளிரும்!
எல்லாமே இன்ப மயம்!

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!