அண்ணாகண்ணன் கவிதைகள்: நந்தன்கனான் விலங்கியல் பூங்கா
Showing posts with label நந்தன்கனான் விலங்கியல் பூங்கா. Show all posts
Showing posts with label நந்தன்கனான் விலங்கியல் பூங்கா. Show all posts

Tuesday, August 07, 2007

நீங்களாவது பார்த்தீர்களா?

Photo Sharing and Video Hosting at Photobucket

காசியில் பார்த்தேன்
பூரியில் பார்த்தேன்
காஞ்சியில்கூட பார்த்தேன்
சென்னையில் மட்டும் காணவில்லை
குரங்குகளை.

கைப்பொருளைப் பறித்து
மரங்களிலும்
கோயில் கோபுரங்களிலும் அமர்ந்துண்ணும்
அந்தக் குரங்குகள் எங்கே?

கங்காரு போல் தாய்வயிற்றைக்
கட்டிக்கொண்டு அசைந்தாடிச் செல்லும்
குட்டிக் குரங்குகள் எங்கே?

சமர்த்தாக உட்கார்ந்து
பேன் பார்க்குமே!
அவை எங்கே?

பல்லைக் காட்டிச் சிரித்து
தலைகீழாகத் தொங்கி
கிளைக்குக் கிளை தாவி
ஓடி விளையாடி
வாழ்வை ரசித்துக்கொண்டிருந்த
அவை எங்கேதான் போய்விட்டன?

குரங்கே எனத் திட்டுவதுகூட
குறைந்துவிட்டது!

வண்டலூரில் அடைத்து வைத்திருக்கிறார்கள்
சிலவற்றை.
டிஸ்கவரி அலைவரிசையில்
கொஞ்சம் பார்க்க முடிகிறது.
அனிமேஷன் படங்களிலும் சில உண்டு.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை
சாத்துகிறார்கள் பக்தர்கள்.
அவற்றையும்
மனிதர்களே தின்றுவிடுகிறார்கள்.

அட பாவமே!
சங்கிலியில் கட்டிக்கொண்டலையும்
குரங்காட்டியைக்கூட காணவில்லையே!

நன்றி: தமிழ்சிஃபி சுதந்திர தினச் சிறப்பிதழ்

==================================
குறிப்பு: மேலே உள்ள படத்தை ஒரிசாவின் நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் எடுத்தேன்.