அண்ணாகண்ணன் கவிதைகள்: கூக்கூ கீக்கீ

Saturday, September 28, 2013

கூக்கூ கீக்கீ

ஆஹா! உலகம் வளருதே!
ஆசை ஆசை மலருதே!
ஏஹேய்! எங்கும் புதுமையே!
எல்லாம் எல்லாம் இனிமையே!

கூக்கூ கீக்கீ பாடுவோம்
குட்டிக் கரணம் போடுவோம்
பூக்கும் பூவை நோக்குவோம்
புத்தம் புதுசாய் ஆக்குவோம்!

விஞ்ஞா னத்தின் விந்தைகள்
விண்ணைத் தாண்டும் சிந்தைகள்
பிஞ்சுக் குள்ளே மேதைகள்
பேட்டை தோறும் வேட்டைகள்!

எக்கச் சக்கம் வாய்ப்புகள்
எட்டுத் திக்கும் வெற்றிகள்!
துக்கம் தோல்வி அச்சமா?
தூக்கிப் போடு மொத்தமா!

கிழக்கும் மேற்கும் ஒன்றுதான்
கருப்பும் வெளுப்பும் ஒன்றுதான்
சுழலும் ஆண்பெண் ஒன்றுதான்
சமச்சீர் ஆனது இன்றுதான்.

மேலை கீழை நாடுகள்
விரலின் நுனியில் நாடுங்கள்!
காலை மாலை ஓட்டமே!
கைகூட்டுமே! கொண்டாட்டமே!

(நன்றி: கல்கி தீபாவளி மலர் 2011)

http://www.vallamai.com/?p=72

No comments: