அண்ணாகண்ணன் கவிதைகள்: February 2006

Sunday, February 26, 2006

தொட்டுப் போகும் (இசைப் பாடல்)




தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

குரல் மின்னிடும் இசை உன்னதம்
உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
கரு வண்டினம் வலம் வந்திடும்
அரு மலர்வனம் அதன் நறுமணம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

அருள் தூறிடும் அமுதூறிடும்
பொருள் மீறிடும் புதையல் தடம்
தலையாட்டிடும் மழலை மனம்
தாலாட்டெனும் தனி மந்திரம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

சிலை சித்திரம் நடை நாடகம்
ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
உரு மாறிடும் நிழல் ஓவியம்
கலை மேவிடும் மலை மாருதம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

கரை யாவையும் கரைத்தே எழும்
சிறை யாவையும் மறுத்தே எழும்
குறை யாவையும் அறுத்தே எழும்
நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
மனம் ஆடிடும் குடை ராட்டினம்
களி காதலின் துளிப் பாற்கடல்


(23.02.06)

Sunday, February 12, 2006

வானப் பரிசு


விடிய விடியக் கொட்டுது
விடிந்த பின்னும் சொட்டுது

முத்து முத்தாய்ச் சிதறுது
முரட்டுத் தனம் தெரியுது
பித்துப் பிடித்த பேய்மழை
பின்னிப் பின்னி எடுக்குது.

காணும் எங்கும் வெள்ளமே.
காணவில்லை பள்ளமே.
கோணம் கொள்ளை கொள்ளுமே
குளிர்ச்சி நம்மை அள்ளுமே.

பளீர் பளீர் மின்னலே
படார் படார் இடிகளே
சுளீர் சுளீர் சாரலே
தொடரும் தவளைப் பாடலே!

கருத்த வானம் மிரட்டுது
கையில் குடையைத் திணிக்குது
கருணை அற்ற காற்றதைக்
கையில் இருந்து பிடுங்குது.

நாடு நகரம் மிதக்குது
நதியும் கரையை உடைக்குது
காடு வயல் மூழ்குது
கடலும் எல்லை மீறுது.

கூடும் போதும் சிக்கலே
குறையும் போதும் சிக்கலே.
கோடு தன்னில் நிற்குமேல்
கோடி நன்மை கிட்டுமே!

வானப் பரிசு வருகவே!
மாதம் தோறும் பொழிகவே!
மானம் காக்கும் மாமழை
வருக வருக வருகவே!!